எமது நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல,
” நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசம்பர் 10 ஆம் திகதியே நிதி அமைச்சர் சபையில் உரையாற்றினார். அதன்பின்னர் நிதி நிலைவரம் பற்றி இதுவரை தெளிவுபடுத்தவில்லை. எனவே, நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, நிதி அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும். தற்போது ரஷ்யாவிடம்கூட கடன் கேட்கின்றனர். எமது நாட்டு பொருளாதாரம் வங்குரோத்து அடைந்துவிட்டது ” – என்றார் கிரியல்ல எம்.பி.
இதனால் ஆளுங்கட்சியினர் கடுப்பாகினர். நாடு வங்குரோத்து அடையவில்லை எனவும் வாதிட்டனர். நிதி அமைச்சர் சபைக்கு வருகின்றார் எனவும் குறிப்பிட்டனர்.
அதுமட்டுமல்ல சர்வக்கட்சி மாநாட்டின்போது இது தொடர்பில் பேசலாம் எனவும் ஆளுங்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.