Our Feeds


Friday, April 22, 2022

ShortTalk

ஈஸ்டர் தாக்குதல் - காத்தான்குடியில் கைதான 60 பேரில் ஐவருக்குப் பிணை: காத்தான்குடி பொலிஸில் கையொப்பமிடவும் நீதிவான் உத்தரவு!



(கனகராசா சரவணன்)


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணியமை தொடர்பாக சந்தேகத்தில்; கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60 பேரில் ஐவர் இன்று வெள்ளிக்கிழமை (22) பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையோரை மே 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் உத்தரவிட்டார்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் 4 வெவ்வேறு இலக்கம் கொண்ட வழக்குகளை தாக்கல் செய்தனர். இதனையடுத்து இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இவர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அவர்களில் 5 பேரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இருவர் சரீரப் பிணையில் விடுவித்த நீதிவான் மாதாந்தம் 2 ஆம் மற்றும் 3 ஆம் கிழமைகளில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் பிற்பகல் 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கையொழுத்திடுமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை ஏனைய 55 பேரையும் தொடர்ந்து மே மாதம் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிவான் உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »