நான்கு ஆண்டுகளில் சுமார் 1, 000 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை நாட்டுக்குள் தருவித்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலக குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான ‘ தெமட்டகொட ருவன் ‘ எனும் பெயரால் அறியப்படும் ருவன் சமில பிரசன்ன கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பிணை பெற்றுத் தருவதற்கு என சுமார் ஒன்றரைக் கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் செயலாளர்களில் ஒருவர் என அடையாளப்படுத்தப்படும் நபர் உட்பட மூவர் சிஐடி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் சஞ்சீவ ரத்நாயக்க இன்று (10) உத்தரவிட்டார்.
பொது மக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவின் செயலர்களில் ஒருவர் எனக் கூறப்படும் மாலபே பகுதியைச் சேர்ந்த காஞ்சன எரிக் சிங்ஹாரகே, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் ஆர். துமிந்த சில்வாவின் இணைப்புச் செயலர் என கூறப்படும் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த மீரா சாஹிபு மொஹம்மட் மொஹிதீன் சப்ராஸ் மற்றும் அவரது மனைவியான ஷகிலா மும்தாஸ் தையூப் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டவர்களாவர்.