Our Feeds


Thursday, April 7, 2022

ShortNews

நாளை முதல் விசேட பஸ் சேவைகள் முன்னெடுப்பு

 

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளுக்காக நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பஸ் சேவையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு பெஸ்ட்டியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்திற்கு மேலதிகமாக கடவத்தை, கடுவலை மற்றும் மாக்கும்புர உள்ளிட்ட மையங்களில் இருந்தும் இந்த விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளன.

இந்த பேருந்து சேவைகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ள நிலையில், இரண்டாம் கட்டமானது பயணிகளின் கோரிக்கைக்கு அமைய முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவையானளவு எரிபொருள் கிடைக்கப்பெறாவிட்டால், புத்தாண்டு பஸ் சேவையினை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சித்திரை புத்தாண்டு காலத்தில் ரயில் சேவைகள் இடம்பெறாது என வெளியாகியுள்ளதாக தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் அதிகளவான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை இன்று (7) பிற்பகல் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »