Our Feeds


Wednesday, May 25, 2022

ShortNews

மேலும் ஒரு ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட ரணில் முயற்சி - பணவீக்கம் 40 வீதத்தை எட்டக்கூடிய நிலை!



ஒரு ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.


ஒரு ரூபாவிலேனும் அரசாங்கத்திற்கு வருமானம் இல்லாமையினால், இந்த தீர்மானத்தை எட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் 40 வீதத்தை எட்டக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சுக்களை தவிர்ந்த ஏனைய அனைத்து அமைச்சுக்களின் செலவீனங்களை குறைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் 6 மாத காலப் பகுதிக்குள் இடைகால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கூறுகின்றார்.

அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் 2 வருடங்களுக்கான திட்டங்கள் தொடர்பிலான யோசனைகளும் இந்த இடைகால வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

பணவீக்கம் அதிகரிக்கப்படும் அளவிற்கு மக்கள் போராட்டங்களும் அதிகரிக்கும் என அவர் கூறுகின்றார்.

அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வெளிநாட்டு நட்பு நாடுகளிடம் உதவிகளை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மருந்து மற்றும் உரம் ஆகிய உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் எதிர்வரும் வாரத்தில் சீன தூதுவரை சந்திக்க தான் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »