றிப்தி அலி
“அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் பதவியினை பொறுப்பேற்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தினை ஏழு நாட்களுக்குள் அறிவிப்பேன். இப்பதவி எனக்கு பாரிய சுமையானதொன்றாகும். இந்தத் தெரிவு தொடர்பில் எனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் கலந்துரையாடிய பின்னரே, அதனைப் பொறுப்பேற்பது தொடர்பிலான இறுதி முடிவினை அறிவிப்பேன்”
கடந்த சனிக்கிழமை (18) கண்டியில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாகத் தெரிவின் பின்னர் ஏழாவது தடவையாக மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, தான் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 8,000க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாகத் தெரிவு அதன் யாப்பின் பிரகாரம் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கொரு முறை நடைபெறுவது வழமையாகும். இதன் அடிப்படையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக்கூட்டம் கண்டி, கட்டுகலை ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 139 கிளைகளுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டன. எனினும் இந்த பொதுக் கூட்டம் தொடர்பில் எந்தவொரு ஊடக அறிக்கையோ, ஊடகங்களுக்கான அழைப்பிதலோ ஜம்இய்யத்துல் உலமாவினால் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்றே கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டமும் ஊடகங்களுக்கு மறைக்கப்பட்டது. எனினும், அப்போது ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக றிஸ்வி முப்தி தெரிவுசெய்யப்பட்டதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டினார் என்ற செய்தியின் மூலமே குறித்த கூட்டம் நடைபெற்ற விடயம் முஸ்லிம் சமூகத்திற்கு தெரியவந்தமை இவ்விடத்தில் நினைவுபடுத்தத்தக்கதாகும்.
எனினும் யாப்புத் திருத்தத்தின் போது மாத்திரம் சிறு சலசலப்பொன்று சபையில் ஏற்பட்டதாகவும் எனினும் இத்திருத்தங்கள் சபையோரினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
மூத்த உலமாவான அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத், சுகயீனம் காரணமாக தற்போது ஓய்விலுள்ளமையினால் கடந்த பொதுக் கூட்டத்தில் அவருக்காக உருவாக்கப்பட்ட தலைவருக்கு சமனான அதிகாரங்களுடனான ‘பிரதித் தலைவர்’ எனும் பதவி இந்த பொதுக் கூட்டத்தில் நீக்கப்பட்டது.
அத்துடன் அரசியல் கட்சிகளின் செயற்குழுவினை ஒத்ததாக ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாகக் குழுவின் எண்ணிக்கையும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக எம்.எச்.எம். அஷ்ரப் இருந்த போது காணப்பட்ட அதியுயர் பீட உறுப்பினர்களின் எண்ணிக்கையான 23, தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமின் வருகையினை அடுத்து 99 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிர்வாகத் தெரிவு வாக்கெடுப்பிற்கு முன்னதாக மத்திய குழு முன்னிலையில் றிஸ்வி முப்தி விசேட உரையொன்றினை நிகழ்த்தினார். இதன்போது விசேட வேண்டுகோளொன்றினையும் முன்வைத்திருந்தார்.
அதாவது, புதிய நிர்வாகத்தில் தன்னை மீண்டும் தலைவராக தெரிவுசெய்ய வேண்டாம் என்பதே அந்த வேண்டுகோளாகும். எனினும், குறித்த வேண்டுகோளினையும் மீறி ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.
அதேபோன்று, கடந்த செயற்குழுவில் உப செயலாளராக செயற்பட்ட அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முர்சித் முழப்பரும் இம்முறை குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவில்லை. அவரின் வெற்றிடத்திற்கு அஷ்ஷெய்க் ஏ.சீ.எம். பாசீல் ஹுமைதி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த செயற்குழுவில் உறுப்பினர்களாக இருந்த ஐந்து பேர் புதிய செயற்குழுவிற்கான தேர்தலில தெரிவுசெய்யப்படவில்லை. எனினும் இவர்கள் நியமன உறுப்பினர்களாக செயற்குழுவிற்கு உள்வாங்கப்படலாம்.
கடந்த செயற்குழுவில் உறுப்பினர்களாக செயற்படாத அஷ்ஷெய்க் எம். ரிபாஹ், அஷ்ஷெய்க் என்.டீ.எம். லரீப் மற்றும் அஷ்ஷெய்க் ஏ.எல். அப்துல் கப்பார் ஆகியோர் புதிய செயற்குழுவில் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த தெரிவினை அடுத்து மத்திய சபையில் உரையாற்றிய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, “ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்களாக தெரிவுசெய்யப்படக் கூடிய உமர்தீன் மௌலவி உள்ளிட்ட பலர் இங்குள்ளனர். அவர்களை தெரிவுசெய்திருக்க முடியும். எனினும் இப்பதவியினை பொறுப்பேற்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தினை ஏழு நாட்களுக்குள் அறிவிப்பேன்” என்றார்.