நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வீடுகளாக பயன்படுத்துவதற்காக 101 புதிய வீடுகளை ஒதுக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்.
அமைச்சரவைப் பத்திரத்தின்படி, பன்னிபிட்டியவிலுள்ள “வியத்புர” வீடமைப்புத் திட்டத்தில் இருந்து இவ்வாறு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இந்த 101 வீடுகளுக்காக சுமார் 1795 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதி பாழடைந்து வரும் நிலையில், அந்த வீடுகளுக்கு போதிய இடவசதி இல்லையெனவும் அதற்கு மாற்றாக இந்த வீட்டுத் தொகுதிகளை வழங்க அமைச்சரவைப் பத்திரம் பரிந்துரைக்கிறது.
மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையால் வீடுகள் சேதமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக நடவடிக்கையாக முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை ஒதுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.