பா.நிரோஸ்
நாட்டின் கடன் தொகையான 50 பில்லியன் ரூபாயை புலம்பெயர் தமிழர்கள் செலுத்துவதற்கு முன்வந்தால் வடக்குக், கிழக்கு, மலையக மக்களுக்கு அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு தயாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (7) இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ப்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்,
நாட்டின் பொருளாதாரத்தை புலம்பெயர் தமிழர்கள் கட்டியெழுப்பு முன்வந்தால், அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தயாரா? 30 வருடங்களுக்கு மேலான தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்துக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களே நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.
வடக்கிலும், கிழக்கிலும் இடைக்கால நிர்வாகத்துக்கான அதிகாரத்தை வழங்கி, பொலிஸ், காணி அதிகாரத்தை வழங்கி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த ஜனாதிபதி, பிரதமர் தயாரா? ஏன் நீங்கள் இவ்வாறு சிந்திப்பதில்லை எனவும் சபையில் கேள்வி எழுப்பினார்.