தேவைகளைப் பூர்த்தி செய்யாத மென்பொருள் ஒன்றுக்கு இலங்கையின் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் 664 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், மேலும் 50 லட்சம் ரூபாவை மாதாந்தம் பராமரிப்பு கட்டணமாக செலுத்தி வந்துள்ளதாகவும் அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (COPE – கோப்) விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்டது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SP) மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியவற்றை கோப் குழு கடந்த செவ்வாய்க்கிழமை (மே 31) விசாரணைக்கு அழைத்திருந்தது.
தேவையான மருந்துகளைப் பெறுவதற்கு கட்டளை கொடுத்து, அதை பெற்றுக்கொள்வதற்கு ஏற்படும் காலதாமதம் குறித்து இவ்விசாரணையின்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அப்போது கூட்டுத்தாபனத்திலுள்ள மென்பொருளில் சில விடயங்களை மாத்திரம் உள்ளீடு செய்ய முடியும் என்பதும் தாமதத்துக்கான ஒரு காரணமாக கூட்டுத்தாபன பிரதிநிதியால் தெரிவிக்கப்பட்டது.
இவ்விசாரணையினபோது அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன பிரதிநிதிகள் இது குறித்து கூறுகையில், மேற்படி மென்பொருளைத் தயாரிப்பற்கு சுமார் 7 வருடங்கள் தேவைப்பட்டதாக தெரிவித்தனர்.
இம்மென்பொருளை தயாரிப்பதற்காக ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அந்நிறுவனம் 2008 ஆம் ஆண்டு அதை தயாரிக்க ஆரம்பித்தது. 2015 ஆம் ஆண்டு அது பூர்த்தியடைந்தது என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
இம்மென்பொருளுக்காக குறித்த தனியார் நிறுவனத்துக்கு 644 மில்லியன் (64.4 கோடி) ரூபா செலுத்தப்பட்டதாகவும், அத்துடன் பராமரிப்பு வேலைகளுக்காக மாதாந்தம் 5 மில்லியன் (50 லட்சம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இம்மென்பொருள் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இல்லை எனவும், சில வகையான தகவல்களை மாத்திமே இதில் தரவேற்ற முடியும் எனவும் அவர் கூறினார்.
அப்போது, இது ஒரு குற்றச்செயல் என கோப் குழு அங்கத்தவரான கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறினார்.
அதேவேளை, தற்போதுள்ள மென்பொருளை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தேவைகளுக்கு ஏற்ப தரமுயர்த்துவதற்கு 7000 மில்லியன் (700 கோடி ரூபா) தேவைப்படும் எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன பிரதிநிதி தெரிவித்தார்.
இந்நிலையில், இத்தகைய மென்பொருளை தரமுயர்த்த 7 பில்லியன் டொலர் தேவைப்படும் எனக் கூறுவது குறித்து ஆட்சேபம் தெரிவித்த கோப் குழுவின் தலைவர் கலாநிதி சரித் ஹேரத், இளைய தலைமுறையினர் இதை மிகக் குறைந்த செலவில் செய்வார்கள் இலவசமாக செய்துகொடுக்கவும் முடியும்’ என்றார்.
அத்துடன், இந்நாட்டின் சுகாதாரத் துறையின் சரக்கு முகாமைத்துவம், கொள்முதல் முகாமைத்துவம், தேவைப் மதிப்பீடுகள் ஆகியவற்றுக்குப் பொருத்தமான மென்பொருட்களை தயாரித்து வழங்குமாறு நாட்டுக்காக தான் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.