(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு 70 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யு.எஸ்.பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
30 நாட்களுக்கு முன்னர் முற்பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் , இதுவரையிலும் போதுமானளவு எரிபொருள் கிடைக்கப் பெறவில்லை. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப் பெறாமையின் காரணமாக நாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பிற்காக பொலிஸாரை மாத்திரம் கடமைகளில் ஈடுபடுத்துவது போதுமானதல்ல. எனவே இராணுவத்தினரையும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் என்றார்.