மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிரித்து வருகிறது. வித்தியாசமான முறையில் கடத்தல்காரர்கள் போதைபொருளை கடத்தி வருகின்றனர். இவற்றை தடுக்க பொலிஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசின் ஜிசின் மற்றும் ரிஷொனொவ் நட் ஹ்கினுவ் என்ற பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (சுப்பர் மார்க்கெட்) வெளிநாட்டில் இருந்து வாழைப்பழ பெட்டிகள் வந்தன.
வாழைப்பழங்கள் வந்த பெட்டியை பல்பொருள் அங்காடி ஊழியர்கள் பிரித்து உள்ளே இருந்த பழங்களை எடுத்துள்ளனர். அப்போது, அந்த வாழைப்பழ கூடைக்குள் பல்வேறு நிறங்களில் பொதிகள் இருந்தன.
அந்த பொதிகளை திறந்து பார்த்த பல்பொருள் அங்காடி ஊழியர்கள் அதில் கொக்கேன் போதைபொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து பல்பொருள் அங்காடிக்கு வந்த பொலிஸார், வாழைப்பழ பெட்டிகளில் இருந்து கிலோ கணக்கில் போதைப்பொருளை கைப்பற்றினர். மொத்தம் 840 கிலோ போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு இலங்கை ரூபாவில் சுமார் 20,000 கோடி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த வாழைப்பழ கூடைகள் எந்த நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு இடத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக போதைபொருள் கும்பல் கிலோ கணக்கில் போதைப்பொருளை தவறுதலாக சூப்பர் மார்க்கெட்டிற்கு அனுப்பி வைத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்