மைனா கோ கம,கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
சட்டமாதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிடர் ஜெனரால் அய்ஷா ஜினசேன இதனை கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று (01) அறிவித்தார்.
ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு மேலதிகமாக மஹிந்த காந்தகம,திலிப் பெர்ணான்டோ, நிஷாந்த ஜயசிங்க ஆகியோரையும் சந்தேக நபர்களாக பெயரிடுவதாக மேலதிக சொலிசிடர் ஜெனரல் அய்ஷா ஜினசேன அறிவித்தார்.
மைனா கோ கம,கோட்டா கோ கம மீதாக தாக்குதல்கள் தொடர்பான நீதிவான் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நேற்று (1) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது விசாரணைகள் தொடர்பில் விளக்கமளிக்கவும் மேல்மாகாண சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றாமை தொடர்பிலும் விளக்கமளிக்க பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன நேற்று மன்றில் நேரில் ஆஜராகியமை விசேட அம்சமாகும்.
பொலிஸ்மா அதிபருக்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகர பிரதி சொலிசிடர் ஜெனரல் டிலான் ரத்நாயக்கவுடன் ஆஜராவதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது. சந்தேக நபர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான யு.ஆர்.டி சில்வா,ராசீக் சரூக்,ஷவேந்திர பெர்ணான்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ச குலரத்ன ,உபுல் ஜயசூரிய,மைத்திரி குணவரத்ன,சரத் ஜயமான்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் ஆஜராகின.
இந்நிலையில் தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி வாதங்களை முன்வைத்தார்.
மே 9ஆம் திகதி தனது சேவை பெறுநர் அலுவலகத்தில் இருந்த போது காலி முகத்திடல் பகுதியில் சலசலப்பு உருவாகுவதாக அறிந்து அவ்விடத்துக்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
‘அங்கு சென்ற போது கொழும்பு மத்திய பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர பொலிஸ்மா அதிபரிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக கூறி ஆலோசனைகள் சிலவற்றை எனது சேவை பெறுநருக்கு அறிவித்துள்ளார்.
அன்றைய தினம் நண்பகல் 12.35 – 12.40 மணிக்குமிடையில் பொலிஸ் மா அதிபரிடமிருந்து அந்த ஆலோசனைகள் அவருக்கு கிடைத்துள்ளன. இந்நிலையில் அந்த ஆலோசனைகள் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு முரணான அமைந்திருந்தால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் எனது சேவை பெறுநர் ஆலோசனை கோரியுள்ளார். அவரது ஆலோசனைகளும் முரண்பாடானதாக அமைந்திருந்தது.
எனவே, எனது சேவை பெறுநர் ஜனாதிபதியை தொடர்பு கொண்டு அது தொடர்பில் வினவி அவரின் ஆலோசனைக்கு அமையவே அத்துமீறியவர்கள் மீது நீர்தாரை பிரயோகம், கண்ணீர்புகை பிரயோகம் என்பனவற்றை மேற்கொண்டுள்ளார்.ஜனாதிபதியை தொடர்பு கொள்ள சுமார் 11 நிமிடங்கள் வரை சென்றது என தெரிவித்தார்.