Our Feeds


Thursday, June 9, 2022

ShortTalk

இந்தியாவை தவிர யாரும் உதவத் தயாரில்லை - இலங்கைக்கு உதவ இந்தியாவுக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது - கைவிரித்தார் ரனில்!



பா.நிரோஸ்


உணவு, மருந்து பொருட்கள், உரம் ஆகியவற்றை கொள்வனவு செய்ய வெளிநாடுகள் உதவி கிடைத்தாலும், எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்ய இந்தியாவை தவிர வேறு எந்த நாடும்  இலங்கைக்கு உதவத்  தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நிலைமையில் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கு இந்தியாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாகவும் சபையில் தெரிவித்திருந்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று (8) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அனைவரும் அமைச்சுப்பதவிகளை பெற வேண்டுமென்ற தேவையில்லை. 

அபிவிருத்திக்காகவும் பிரச்சினையில் இருந்து மீண்டு வரவும்  பாராளுமன்றத்தை நிறுவனமாக நாங்கள் பயன்படுத்த வேண்டும். இந்த இடத்தில் இருந்து எஞ்சியுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். நான் நேற்று (நேற்று முன்தினம்) மாலை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் கலந்துரையாடினேன். எமது வேலைத் திட்டங்களுக்கு அமைய செயற்படுவோம். 

இங்கே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டாலே மற்றைய நாடுகளிடம்  உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு சிறந்த முடிவை வழங்குவதாக அவர் கூறியுள்ளார். இதன்படி இந்த மாத இறுதிக்குள் இந்த வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய முயற்சிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

எம்மிடத்தில்  இப்போது எரிபொருள் இல்லை. நிலக்கரி இல்லை. எந்தவொரு நாடும் இதற்காக பணம் கொடுக்கப்போவதில்லை. இதற்காக இந்தியா மட்டுமே கடனை வழங்குகின்றது. கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுகின்றது. 

இதற்கான நிதி வேகமாக முடிவடைந்து வருகின்றது. எரிபொருள், மின்சாரம் என்பன முக்கியமாகும். பிள்ளைகள் படிக்கவும், தொழிற்சாலைகளை நடத்திச் செல்லவும் வேண்டும் எனக் கூறியே நாங்கள் நிதியை பெற்றுக்கொள்கின்றோம்.

எனினும் இந்தியா எமக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்தியாவில் சிலர் எதிராகவே இருக்கின்றனர். ஏன் இலங்கைக்கு இப்படி கொடுக்கின்றீர்கள் என அவர்கள் கேட்பதாகவும் கூறப்படுகின்றது என்பதனை இந்த சபையில் கூறிக்கொள்கின்றேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »