ஜனாதிபதியாக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் கட்டியெழுப்ப முடியாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அதன் சிரேஷ்ட உறுப்பினர்கள் வினவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள முறுகல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது.
எனினும் இதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த கலந்துரையாடலின் போதே இவ்வாறு வினவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் அமைச்சு பதவிகளை ஏற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ஜகத் புஷ்பகுமார, லசந்த அழகிய வண்ண, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
தங்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சந்திப்புகளுக்கு அழைப்பு விடுப்பதை தவிர்க்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறான கடிதம் எவையும் அனுப்பப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனிப்பட்டோரின் தேவைக்காக அவ்வாறான கடிதங்;கள் அனுப்பப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவினாலேயே அது அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.