(அசார்தீன்)
தம்பபண்ணி கடற்படை முகாமில் கடமையாற்றும் புலனாய்வுப் பிரிவினர் கேரளா கஞ்சாப் பொதிகளை கொண்டு செல்ல முற்பட்டவேளை பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரினால் இன்று (21) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பபண்ணி கடற்படைக்குச் சொந்தமான இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாப் பொதிகளை விற்பனை செய்வதற்கு கொண்டு செல்லவதாக புத்தளம் பிராந்திய போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குருனாகல் வீதியின் கள்குளம் பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இவர்களிடமிருந்து 650 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் கஞ்சாவைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட தம்பபண்ணி கடற்படைக்குச் சொந்தமான இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுடன் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் மற்றும் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.