காலிமுகத்திடலில் நேற்று அதிகாலை, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து கடற்படை உத்தியோகத்தர்கள் இருவர் பதவி விலகியதாக வெளியான சில சமூக ஊடக செய்திகளை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.
ஜனித் ராஜகருணா மற்றும் மல்ஷான் பிரதாபசிங்க ஆகிய இரண்டு கடற்படை அதிகாரிகளும் “கோட்டாகோகம” கொடூர தாக்குதலைக் கண்டித்து இலங்கை கடற்படையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், அத்தகைய செய்திகளை கடற்படை மறுத்துள்ளதுடன், சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டபடி இலங்கை கடற்படையிலிருந்து எவரும் விலகவில்லை என்று கூறியுள்ளது.
அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர் மாத்தறையைச் சேர்ந்தவர் என்றும், அவரொரு படைவிட்டோடி எனவும், கடற்படை தெரிவித்துள்ளது.
அவருக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது