(நா.தனுஜா)
வன்முறைகளை விடுத்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், அத்தகைய போராட்டங்களுக்கு இடமளிப்பதுடன் போராட்டக்காரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் வலியுறுத்தியுள்ளார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதற்குக் காரணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவைப் பதவி விலகுமாறு⋅ வலியுறுத்தி கடந்த மூன்று மாத காலமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அவற்றில் சில ஆர்ப்பாட்டங்களிலும், அதனைத் தொடர்ந்தும் வன்முறைச் சம்பவங்கள் வெடித்ததுடன் உயிரிழப்புக்களும் பதிவாகியிருந்தன.
அதேவேளை, ஜனாதிபதியைப் பதவி விலகுமாறுகோரி நாளை (09) தினம் நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் பின்னணியில், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை மற்றும் வன்முறைகளிலிருந்து விலகியிருப்பதன் அவசியம் குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அமெரிக்க தூதுவர் ஜுலி சங் வலியுறுத்தியுள்ளார்.
