அரசியலமைப்பை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திரு.ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவியேற்ற 24 மணித்தியாலங்களுக்குள் கருத்துத் தெரிவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்குமான அடிப்படை உரிமைகளை முற்றாக மீறியுள்ளார் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறப் போவதாக தெரிவித்திருந்த போதிலும், இந்த தாக்குதல் காரணமாக எதிர்காலத்தில் ஏதேனும் தவறுகள் நடந்தால் அதற்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க நேரிடும் எனவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் பொலிஸ் மற்றும் இராணுவ பலத்தை பயன்படுத்தி அப்பாவி மக்கள் மீதான அடக்குமுறை மற்றும் அமைதியான போராட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பேராயர் தெரிவித்தார்.
பொரளையில் உள்ள பேராயர் இல்லத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.