நாட்டில் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக விசாரணைகள் மூழ்கடிக்கப்படுகின்றன.
மேலும் வெளிப்படைத் தன்மையுடன் நீதியை நிலைநாட்டும் பொறிமுறையை நோக்கி நாட்டை இட்டுச் செல்லுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பாப்பரசர் வழங்கிய ஒரு இலட்சம் யூரோ நிதியை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நேற்று (13) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில்,
நாட்டில் ஏதேனும் சம்பவம் இடம்பெற்றால் இரண்டு வாரங்களுக்குள் அதை மறந்து விடும் மிக மோசமான கலாசாரம் இலங்கையில் உள்ளது.
நாட்டில் இடம்பெற்ற கொலைகள் பயங்கரவாத தாக்குதல்கள், பஸ் குண்டுத் தாக்குதல்கள், ரயில் குண்டுகள் தாக்குதல்கள், அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டமை, யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள், போன்ற சம்பவங்கள் இடம்பெற்று இரண்டு வாரங்களில் அனைத்தையும் மறந்து போகும் நிலை இலங்கையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.