கொரியாவில் மீன்பிடித் துறையில் 1,047 தொழில்வாய்ப்புக்கள்
உள்ளதாகவும் அதற்காக இலங்கையரை அனுப்புவதற்கான பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்படுமெனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இந்த வருட இறுதிக்குள் இலங்கையரை அந்தத் தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு கொரிய மனிதவளத் திணைக்களத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் லீ உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொரிய மனிதவள திணைக்களத்தின் இலங்கைக்கான அலுவலகம் திறக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு அமைச்சரும் அங்கு சென்றிருக்கவில்லையென்பதைக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார,
தாம் அங்கு விஜயம் செய்ததாகவும் அத்துடன் கொரிய தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்கள் முன்வைத்துள்ள சிக்கல்கள் தொடர்பிலும் மனித வள திணைக்களத்தின் பணிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரிய பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரிகள் எதிர்கொள்ளும் வெட்டுப்புள்ளி தொடர்பில் கொரிய மனிதவள திணைக்களத்தின் பணிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஒரு தடவை பரீட்சைக்குத் தோற்றியவருக்கு மீண்டும் அடுத்தவருடத்தில் வேறு துறை தொடர்பான பரீட்சைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.