Our Feeds


Monday, August 29, 2022

ShortTalk

அமைச்சரின் வாக்கு பொய்யானது - பல இடங்களில் மீண்டும் எரிபொருள் வரிசை!



2 நாட்களில் எரிபொருள் வரிசைகள் குறைக்கப்படும் என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, சனிக்கிழமை (27) தெரிவித்திருந்த நிலையில், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் (29) எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.


எரிபொருள் இருப்பு இல்லாத காரணத்தால் நேற்றும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், டீசல் இல்லை அல்லது பெற்றோல் இல்லை என்ற பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.

எரிபொருள் நிலையங்களால் முற்பதிவு கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக அமைச்சர் தெரிவித்திருந்த போதும், எரிபொருளை முற்பதிவு செய்த போதிலும் உரிய தொகுதி கிடைப்பதில்லை என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நாட்டிலுள்ள 60 சதவீதமான எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சிலோன் பெற்றோலியம் சேமிப்பு முனையத்தின் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை மூலம் அறிவித்திருந்தது.

எனினும், முத்துராஜவெல முனையத்தில் இருந்து பெற்றோல் விநியோகிப்படுவதில்லை என்று விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »