நிதி மோசடி குற்றத்தை ஒப்புக்கொண்ட சக்வித்தி ரணசிங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, இன்று (14) தீர்ப்பளித்தார்.
11 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்ட அவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா இரண்டு வருடங்கள் வீதம் 22 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை விதித்த நீதிபதி, தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்ததுடன், 275,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வீதம் 275,000 மொத்த அபராதம் விதித்த நீதிபதி, அபராதத்தை செலுத்தத் தவறின் 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
2006ஆம் ஆண்டுக்கும் 2008ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சக்விதி வீடமைப்பு மற்றும் நிர்மாணம் (வரையறுக்கப்பட்ட) தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் 162.8 கோடி ரூபாய் நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அதிக வட்டி வழங்குவதாக ஏமாற்றி குற்றவியல் நம்பிக்கையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சக்விதி ரணசிங்க உட்பட 11 பேருக்கு எதிராக அதிகுற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.