அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தற்போது தெல்கந்த சந்தைக்கு செல்வதில்லையா? என்று ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
தெல்கந்த சந்தையில் சென்று பொருட்களின் விலை அதிகம் என்று கூறியதன் காரணமாகவே, சுசில் பிரேமஜயந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
எனினும், இப்போது தெல்கந்த சந்தையில் முன்னரை விட பொருட்களின் விலை அதிகம். அப்படியானால் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தெல்கந்த சந்தைக்கு செல்வதில்லையா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இயற்கை உரம் காரணமாக பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதையே தாம் எதிர்த்ததாக குறிப்பிட்டதுடன், இன்றும் அதனை எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன் தாம் எழுதிய நூல் ஒன்றை காட்டி, இந்த நூலில் ரணில் விக்ரமசிங்கவின் வரவுசெலவுத்திட்ட யோசனைக்கான பதில்கள் உள்ளதாக தெரிவித்தார்.
அதேநேரம் தாம் நாடாளுமன்றத்துக்கு கல்வியால், தொழிலால் அனுபவம் பெற்றே வந்ததாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.