Our Feeds


Friday, October 14, 2022

ShortTalk

ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்? - வெளியான முழு தகவல்!



(எம்.எப்.எம்.பஸீர்)


இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில், தொடர்ச்சியாக நீதிமன்றில் ஆஜராகாத பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று ( 14) பிடியாணை பிறப்பித்தது. கொழும்பு மேலதிக நீதிவான் சிலினி பெரேரா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.


கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும் ஆ பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் ரிகாஸ் ஹாஜியார் முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் (3ம் இலக்க அறை) முன்னிலையில் ஞானசார தேரருக்கு எதிராக 58559/3/22 எனும் இலக்கத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 8ம் திகதி சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி முறைப்பாட்டாளர் தரப்பின் முதல் சாட்சியாளர் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்த விவகார வழக்கு இன்று மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது மன்றில் ஞானசார தேரர் ஆஜராகியிருக்கவில்லை.

ஞானசார தேரருக்கு பிணை கையெழுத்திட்டவர்களும் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை. இந்நிலையில், மத அனுஷ்டானம் ஒன்றில் கலந்துகொள்வதால் ஞானசார தேரர் மன்றில் ஆஜராக மாட்டார் என நீதிமன்றில் அவரது சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.

இதன்போது, பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக மன்றில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணிகளான கஸ்ஸாலி ஹுசைன் மற்றும் எம்.ஐ.எம். நளீம் ஆகியோர் இது தொடர்பில் தமது கடும் ஆட்சேபனத்தை முன்வைத்தனர்.

‘கடந்த தவணையின்போதும் பிரதிவாதியான ஞானசார தேரர் மன்றில் ஆஜராகவில்லை. அப்போது மத அனுஷ்டாங்களுக்காக ஜப்பான் சென்றுள்ளதாக கூறப்பட்டது. எனினும் அப்போது நாம் ஆட்சேபனை முன்வைக்கவில்லை.

இன்றும் மத அனுஷ்டாங்கள் காரணமாக ஆஜராக முடியாது என கூறப்படுகிறது. வழக்கின் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதிவாதியின் இந் நடவடிக்கைகளை ஏற்க முடியாது. அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கவும்.’ என அவர்கள் கோரினர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் சிலிசி பெரேரா, ஞானசார தேரர் மன்றில் தொடர்ச்சியாக ஆஜராகமையை கருத்தில் கொண்டு அவரை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டார். இதனைவிட ஞானசார தேரரின் பிணையாளர்களுக்கும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவிட்ட நீதிவான் சிலினி பெரேரா, வழக்கை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »