இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருஸலேம் நகருக்கு மாற்றும் திட்டம் இல்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பேச்சாளர், நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
டெல் அவிவ் நகரிலுள்ள பிரித்தானிய தூதரகத்தை இடம் மாற்றுவது குறித்து பிரிட்டனின் முந்தைய நிர்வாகம் ஆராய்ந்ததாக அப்பேச்சாளர் கூறினார்.
இத்திட்டத்தை பிரிட்டன் இன்னும் ஆராய்கிறதா என கேட்டபோது, அரசாங்கத்திடம் அத்தகைய திட்டம் இல்லை என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலின் தலைநகராக விளங்கிய டெல் அவிவிலேயே பெரும்பாலான நாடுகள் தூதரகங்களைக் கொண்டுள்ளன.
எனினும், 2017 ஆம் ஆண்டு ஜெருஸலேம் நகரை தனது தலைநகராக சர்ச்சைக்குரிய விதமாக இஸ்ரேல் அறிவித்ததது.
யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மும்மதத்தினருக்கும் ஜெருஸலேம் புனித நகராக விளங்குகிறது.
இஸ்ரேலியர்களும் பலஸ்தீனர்களும்ஜெருஸலேமை தமது தலைநகராக கருதுகின்றனர். இதனால், ஜெருஸலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தமை சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இத்தீர்மானத்தை அங்கீகரித்ததுடன், அமெரிக்க தூதுரகத்தையும் ஜெருஸலேமுக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தார்.
ஜெருஸலேமை இஸ்ரேலின் தலைநகரா அங்கீகரிப்பதாக அவுஸ்திரேலியா முன்னர் அறிவித்திருந்தது. எனினும், அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் சில வாரங்களுக்கு முன் அத்தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.