Our Feeds


Thursday, November 3, 2022

RilmiFaleel

அரசியல் ரீதியில் பொதுஜன பெரமுன முன்னேறும் - நாமல் .

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சமூக ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும். வன்முறையானது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. தேர்தல் ஊடாகவே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களின் அபிலாசைக்கு அமையவே பொதுஜன பெரமுன செயற்படும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் புதன்கிழமை (நவ 2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஸ்தாபிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை மகிழ்வுடன் கொண்டாடுகிறோம்.

2015ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணியமைத்த போது அவர்களின் கொள்கைக்கு அமைய ஒன்றிணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறினோம்.

அரசியலில் தனித்து விடப்பட்ட தரப்பினரை ஒன்றிணைத்து, பஷில் ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ஸ்தாபித்தார்.

புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்தால் வீதியில் அலையவிடுவதாக நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அப்போது எச்சரிக்கை விடுத்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஸ்தாபித்ததை தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டோம்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்றது.

தேசிய தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்ததன் பின்னர் நிர்வாக கட்டமைப்பில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டோம்.

சமூக ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுவதால் விட்டுக்கொடுப்புடன் செயற்படுகிறோம்.

கட்சி என்ற ரீதியில் புதிய கொள்கையின் அடிப்படையில் செயற்பட தீர்மானித்துள்ளோம். பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வன்முறை ஒரு தீர்வாக அமையாது. 

தேர்தல் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். 

எவர் தலைமையிலான அரசாங்கம் தேவை என்பதை நாட்டு மக்களே இறுதியில் தீர்மானிப்பார்கள். பொதுஜன பெரமுன அரசியல் ரீதியில் முன்னேற்றமடையும்" என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »