Our Feeds


Wednesday, November 16, 2022

ShortTalk

சம்பந்தன், மாவை, சுமந்திரன் மட்டுமே கூடிக் கலைந்தனர் : ஏனைய கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் பொறுப்பை மாவையிடம் ஒப்படைத்தார் சம்பந்தன்



(ஆர்.ராம்)


வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வே தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு என்பதை வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்துவதற்காக, செவ்வாய்க்கிழமை (15) மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் ஒன்றுகூடுமாறு வடகிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்து.

குறித்த அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தான் ஊடகங்களின் ஊடாக வெளியிட்டிருந்தார்.

குறித்த அறிவிப்பு ஊடகங்களின் ஊடாக வெளியிடப்பட்டதை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ ஆகியன கூட்டத்துக்கான அழைப்பு பற்றி தாம் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்ததோடு, குறித்த அறிவிப்புக்கான தீர்மானம் எப்போது யாரால் எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் குழப்பங்கள் காணப்பட்டது.

இந்நிலையில், சுரேஷ்பிரேமச்சந்திரன், விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோருடன் சுமந்திரன் தொலைபேசி வாயிலாக கூட்டத்திற்கான அழைப்பினை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதேநேரம்,இன்று காலையில் ஐ.நா.அதிகாரிகளுடனான சந்திப்பின்போது சம்பந்தன் செல்வம் அடைக்கலநாதனிடத்தில் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முறையான அழைப்புக்கள் விடுக்கப்படாமை, மற்றும் குறுகியகால இடைவெளியில் அழைப்பு விடுக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் குறித்த கூட்டத்தில் பங்கேற்பது மிகக்கடினமான விடயம் என்பதை செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோர் மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக, நேற்று நண்பகலளவில் குறித்த கூட்டத்தினை ஒத்திவைப்பதாக மாவை.சோ.சேனதிராஜா செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தனுக்கு தெரிவித்தாக சித்தார்த்தன் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான நிலையில், இன்று மாலையில் திட்டமிட்டபடி குறித்த கூட்டத்திற்கான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மூவரும் கூடிக்கலந்துரையாடியுள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் சம்பந்தனின் இல்லத்தில் கூடியுள்ளனர். இவர்கள், தமது கட்சி தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக இணைந்த வட, கிழக்கில் அதிகாரப்பகிர்வுடான சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதை நோக்கமாக கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில், தற்போதும் அதேகொள்கையின் பிரகாரம், ஜனாதிபதி ரணிலின் அறிவிப்புக்கு அமைவாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினையே வலியுறுத்துவதென்றும் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பேச்சுவார்த்தைகளின்போது சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வலியுறுத்தும் ஏனைய தரப்பினர் தம்முடன் இணைந்து செயற்பட விரும்பினால் அவர்களையும் இணைத்து தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுப்பதெனவும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

மேலும், குறித்த சந்திப்பின்போது, செல்வம் அடைக்கலாநதன் குறித்த கூட்டத்திற்கு வருவதாக தெரிவித்திருந்தபோதும் தான் கூட்டத்திற்கு வரும் வழியில் ஏனைய தலைவர்களும் பங்கேற்பதற்கு ஏதுவான வகையில் பிறிதொரு தினத்தில் கூட்டத்தினை நடத்த வேண்டும் என்று தன்னைக் கோரியதாக மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “அவர்களுக்கு பொருத்தமான காலத்தில், பொருத்தமான இடத்தில் முறையான அழைப்பினை விடுத்து கூட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாட்டை நீங்கள் முன்னெடுங்கள் நான் எந்த இடமென்றாலுத் அதில் பங்கேற்பதற்கு தயராகவே உள்ளேன்” என்று சம்பந்தன் மாவை.சேனாதிராஜாவிடத்தில் கூறியதோடு “ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பினை நீங்களே மேற்கொள்ளுங்கள்” என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களை கூட்டத்தில் பங்கேற்றிருந்த சுமந்திரன் வீரகேசரியிடத்தில் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »