இலங்கையில் குரங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக விமான நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபரின் கொப்புளங்களில் இருந்து வெளியேறும் திரவங்களை நேரடியாக தொடுவதன் மூலம் மற்றுமொருவருக்கு தொற்று ஏற்படலாம் என அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
நாட்டில் குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கண்டறியப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வீங்கிய நிணநீர் கணுக்கள் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளின் காரணமாக அந்த நபர் தேசிய பாலியல் நோய் சிகிச்சை பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்படி, அவரிடமிருந்து குரங்கு காய்ச்சலுக்கான குறிப்பிட்ட மரபணுக்களை அடையாளம் காண முடிந்தது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.
பாதிக்கப்பட்ட நபர் தற்போது தொற்றுநோய் வைத்தியசாலையில் (IDH) சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, குரங்குக் காய்ச்சல் ஒரு கொடிய நோயல்ல, ஆனால் அது பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் மற்றும் சுவாசத் துளிகள் மூலம் இன்னொருவருக்கு எளிதில் பரவும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நிபுணத்துவ பிரிவின் தலைவர் வைத்திய நிபுணர் ஜானகி அபேநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தொடர்ந்தும் முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.