எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் நலிவடைந்த பிரிவினர் தொடர்பில் நேற்று (8) தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கூட்டாக கொண்டு வந்த கவன ஈர்ப்பு பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இந்நாட்டில் நாம் 1958, 1977, 1983 கால கட்டங்களில் இனவாத கலவரங்களை பார்த்துள்ளோம். 1971, 1988, ஆண்டுகளில் தெற்கில் ஆயுத போரை பார்த்துள்ளோம். 2004ல் சுனாமி அழிவை பார்த்துள்ளோம். அதன்பின் 30 ஆண்டுகால போருக்கு முகம் கொடுத்துள்ளோம். எதுவாக இருந்தாலும், எக்காலத்திலும் இன்றைய நிலைமையை போல் நமது மக்கள் நெருக்கடியை சந்திக்கவில்லை என எண்ணுகிறேன். எக்காலத்திலும் மக்கள் எப்படியாவது மூன்று வேளையும் சாப்பிட்டார்கள். பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடி வாழ்ந்தார்கள். இந்த காலத்தில்தான் இப்படி மிகவும் மோசமான நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறார்கள்.
நாம் இன்று இந்த யோசனையை கொண்டு வந்ததன் நோக்கம், இந்த நெருக்கடிக்குள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிவாரணங்களை ஏற்பாடு செய்யுங்கள் என்ற கோரிக்கையின்படி ஆகும். அது அரசின் கடப்பாடு. அரசு கடமைப்பட்டுள்ளது. எதிரணி என்ற முறையில் நாம் அதை அரசுக்கு எடுத்து கூட கடமைப்பட்டுள்ளோம்.
சபை தலைவர் அவர்களே, நான் அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன். இன்று இந்நாட்டில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, துன்புறும், நலிவுற்ற பிரிவினர், தோட்ட தொழிலாளர் ஆகும். இடதுசாரி தலைவர் என்பதால் இது உங்களுக்கு நன்கு தெரியும். இதை நாம் எப்போதும் சொல்லி வந்தோம். யாரும் கவனத்தில் பெரும்பாலும் எடுக்கவில்லை. இன்று உலகம் சொல்ல ஆரம்பித்து விட்டது. இன்று ஐ.நா அமைப்புகள் கூறுகின்றன. ஐ.நா உணவு விவசாய ஸ்தாபனம் தனது விசேட அறிக்கையில் என்ன கூறுகிறது? இந்நாட்டில் அதிகூடிய உணவின்மை நிலைமையினால், அதிகம் வாழ்க்கை சுமையை சுமக்கும் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறது. தோட்டப்புறத்தில் பெண்கள் மேலதிக சுமையை சுமந்து குடும்பங்களை நடத்துகிறார்கள்.
அதேவேளை, உலக உணவு நிறுவனம், தோட்டப்புறங்களில் உணவின்மை 51 வீதம் என கூறுகிறது. நகர பகுதிகளில் 43 வீதமும், கிராம பகுதிகளில் 34 வீதமும் என கூறுகிறது. இந்த உணவின்மை என்பது ஜனாதிபதி அவர்கள் தினந்தோறும் பேசும் ஒரு விஷயம் ஆகும். நான் சொன்னது போன்று, மூன்று வேளை உணவு என்பது, இன்று இரண்டு வேளை ஆகிவிட்டது. இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் இன்று ஒருவேளைதான் சாப்பிடுகிறார்கள். அது அதிகம் நிகழ்வது இங்கேதான். இதை இன்று நாம் கூறுவதை விட ஐ.நா கூறுகிறது. உலகம் கூறுகிறது என்பதை அரசாங்கம் அறிய வேண்டும்.
அது மட்டுமல்ல, ஐ.நாவின் நவீன அடிமைத்துவத்துக்கான அறிக்கையாளர் டோமாயா ஒபகாடா, சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.நா மனித உரிமை ஆணையக அவைக்கு அறிக்கை சமர்பித்துள்ளார். அவர் என்ன கூறுகிறார்? இலங்கையில் பெருந்தோட்டங்களை காணப்படும் ஒடுக்கு முறைக்கு பின்னால் இனத்துவ காரணம் இருக்கிறது என கூறுகிறார். பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் துன்பங்களுக்கு காரணமாக அவர்கள் தொழிலாளர் என்பதை விட, அவர்கள் சிறுபான்மை தமிழர்கள் என்ற காரணமும் உள்ளது என அவர் கூறுகிறார். இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு.
அவர்களது நிர்வாக கட்டமைப்புகள் தோட்ட நிர்வாகங்களிடம்தான் அதிகம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஏனைய மக்களை போல அவர்களையும் மாவட்ட செயலக, பிரதேச செயலக, கிராம செயலக தேசிய நிர்வாக கட்டமைப்புக்கு உள்ளே கொண்டு வாருங்கள். இன்று மலையக தமிழ் இனத்தின் உள்ளே வாழும் பெருந்தோட்ட பிரிவினரை பின்தங்கிய பிரிவு மக்களாக கருதி அவர்களை தேசிய மட்டத்துக்கு கைதூக்கி விடுங்கள் எனக் குறிப்பிட்டார்.