Our Feeds


Wednesday, November 30, 2022

News Editor

அம்பாறையில் மாணவர்களை கடத்த முயற்சி – ஒருவர் கைது


 

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலை மாணவர்களான 11 வயது மதிக்கத்தக்க இருவரை இரு வேறு சந்தரப்பங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடத்த முயற்சிப்பதாக பொலிஸ் நிலையத்தில் இம்மாதம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.

இதனை அடுத்து சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையில், சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கெமராக்களின் உதவிகள் மற்றும் புலன் விசாரணை முடுக்கி விடப்பட்ட நிலையில் மாணவர்களை கடத்த முயற்சித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேக நபர் கல்முனை பகுதியை சேர்ந்த 27 வயதுடையவராவார். இச்சம்பவமானது தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றுடன் முகங்களை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் மாணவர்கள் சிலரை இலக்கு வைத்து இவ்வாறான கடத்த முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டு கடந்த வாரம் பல முறைப்பாடுகள் பதிவுசெய்யட்டிருந்ததுடன் சாய்ந்தமருது பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதற்கமைய பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் கைது செய்யப்படடதுடன் நேற்று (29) கல்முனை நீதவான் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டார்.

இவ்வடையாள அணிவகுப்பின் போது அச்சந்தேக நபரை பாதிக்கப்பட்ட மாணவன் அடையாளப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து குறித்த சந்தேகநபரை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »