Our Feeds


Tuesday, May 19, 2026

Sri Lanka

இலங்கை பெண் இஸ்ரேலால் கைது - அரசாங்கம் நடவடிக்கை! - பிரதியமைச்சர்


காசா பகுதியை நோக்கிய சர்வதேச மனிதாபிமான உதவிப் படகுப் பேரணியில் பங்கேற்றிருந்த சமீரா மெஹபூப்தீன் என்ற இலங்கை பெண் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான அனைத்து ராஜதந்திர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இது தொடர்பான விபரங்களை வழங்கினார்.

"காசா நோக்கிச் சென்ற படகுப் பேரணியில் பயணித்த இலங்கை பிரஜையான சமீரா மெஹபூப்தீன் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, அந்தப் படகுப் பேரணி இஸ்ரேலிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு, அதிலிருந்த பல நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, டெல் அவிவ் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக இஸ்ரேலிய அதிகாரிகளிடம் சமீராவை நேரில் சந்திப்பதற்கான தூதரக அணுகலை உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளோம். அவரது தற்போதைய நிலைமையை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர் கைது செய்யப்பட்டுள்ளமைக்கான சட்டப்பூர்வ மற்றும் நடைமுறை அம்சங்களைச் சரிபார்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.

"இந்த படகுப் பேரணி இடைமறிக்கப்பட்டமை குறித்து தற்போதைய கட்டத்தில் அரசாங்கம் எந்தவொரு அவசர முடிவுகளையும் எடுக்க விரும்பவில்லை. எனினும், எத்தகைய சூழ்நிலையிலும் சம்பந்தப்பட்ட இலங்கை பிரஜையின் பாதுகாப்பு, நலன், சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் கண்ணியம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எமது நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »