Our Feeds


Saturday, November 26, 2022

ShortTalk

அதிர்ச்சி தகவல் - கத்தார் FIFA WORLD CUP தொடர்பான விபத்துக்களில் 600 இலங்கையர்கள் மரணம் - கட்டுமானத்தில் 6500 பேர் உயிரிழப்பு



கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியுடன் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


2010 ஆம் ஆண்டு முதல் உதைபந்தாட்ட மைதானங்கள், நெடுஞ்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய நிர்மாணப்பணிகளில் பங்குபற்றிய இலங்கையர்களே  இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, கத்தாரில் 6,500 கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்துக்களில் இறந்துள்ளதாக ஆசிய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

2014ஆம் ஆண்டிலேயே  இலங்கையர்களின் அதிக எண்ணிக்கையான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது 54 பேர் உயிரிழந்துளள்னர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மொத்த இலங்கை நபர்களில்  439 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நட்டஈடு வழங்கியுள்ளது.

இந்த 439 பேரும்  வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளதாக அதன் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர், பதிவு செய்யாமல் வெளிநாட்டில் இறந்தவர்கள் தொடர்பான தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும், எனவே 12 ஆண்டுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டலாம் என்றும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »