புத்தாண்டுத் தினத்தில் யுக்ரைன் நடத்திய தாக்குதலொன்றில் தனது படையினர் 89 பேர் உயிரிழந்தனர் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இத்தாக்குதலின்போது, ரஷ்ய படையினர் தமது கைத்தொலைபேசிகளை பயன்படுத்திக் கொண்டிருந்தமையே இந்த இழப்புக்கு காரணம் எனவும் ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யா கைப்பற்றிய யுக்ரைனிய பிராந்தியமான டோனெட்ஸ்கிலுள்ள மெகைவ்கா எனும் சிறிய நகரில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
2014 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இப்பிராந்தியம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த முதலாம் திகதி யுக்ரைனிய படையினர் இந்நகரில் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 63 ரஷ்ய படையினர் உயிரிழந்தனர் என ரஷ்யா முன்னர் தெரிவித்திருந்தது.
எனினும், இத்தாக்குதலில் 89 பேர் பலியாகியுள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
யுக்ரைனின் ஒற்றைத் தாக்குதலில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் ஆகக்கூடுதலான எண்ணிக்கை இதுவாகும்.
படையினரின் இருப்பிடத்தை எதிரிகள் கண்டறிவதை தடுப்பதற்காக படையினர் தொலைபேசி பயன்படுத்துதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இத்தாக்குதலுக்கு யுக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. இத்தாக்குலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 300 பேர் காயமடைந்துள்ளனர் என யுக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது.