உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியல் இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் விசுவாசிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான அமைப்பாளரும், மேல்மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சி.வை.பி. ராம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கட்சியின் பிரதான அமைப்பாளர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் தன்னால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள்கூட வெட்டப்பட்டுள்ளன. எனவே, இது சம்பந்தமாக கட்சி தலைமைப்பீடம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ராம் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முஜிபூர் ரஹ்மானும், கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதற்கு பொறுப்புகூற வேண்டும் எனவும் ராம் திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்பினர்கள் பலர் இருக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதன் பின்னணி என்னவென கேள்வி எழுப்பியுள்ள ராம், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு வாய்ப்பளிக்க தான் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.