இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுமார் 8000 உறுப்பினர்களைக் கொண்ட 40க்கும் மேற்பட்ட யாழ். மாவட்ட மீனவர் சங்கங்கள் தங்களது மீன்பிடி படகுகளை வீதிக்கு இழுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
மீனவர் சங்கப் பிரதிநிதிகள் இது தொடர்பில் சண்டே டைம்ஸிடம் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய சிறிய படகுகளுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரின் நடவடிக்கை குறித்து இன்று கலந்துரையாடப்படவுள்ளது.
இது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உரிமம் வழங்குவதில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடையே லஞ்சம் மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றனர்.
எனினும் இந்த கூற்றை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முற்றாக நிராகரித்துள்ளார்.
“இலங்கை கடற்பரப்புக்களில் இந்திய சிறிய படகுகளுக்கு மீன்படிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானது.
இவ்வாறானதொரு முடிவை நானும் எடுக்கவில்லை. ஜனாதிபதியும் எடுக்கவில்லை. அப்படியிருக்க இது ஒரு கட்டுக்கதை” என்றும் அமைச்சர் உறுதிபட கூறினார்.