Our Feeds


Friday, February 17, 2023

ShortTalk

கடந்த ஆட்சியாளர்களிடமிருந்து பெற வேண்டியதை பெற்று மக்களுக்கு கொடுக்க வேண்டும் - ரிஷாத் பதியுத்தீன்



நாளுக்கு நாள் வாழ்க்கை செலவு அதிகரிப்பதால் மக்கள் வாழ வழியின்றி தவிப்பதாகவும் அவர்களின் கஷ்டங்களை போக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"மின்சாரக் கட்டணம் இலங்கையில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள். இவ்வாறான அழுத்தங்களால் மக்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று திண்டாடுகின்றனர். 

கடந்த ஆட்சியாளர்களின் தவறுகள், பிழையான வழிநடாத்தல்கள் மற்றும் அநியாயங்களினாலேயே எமது நாடு இன்று குட்டிச்சுவராகி, அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. அவ்வாறானவர்களை சேர்த்துக்கொண்டே ஜனாதிபதி ஆட்சியை நடத்துகின்றார். அவர்களை பகைக்காமல் பாதுகாக்கும் நிலையை ஏற்படுத்தி ஜனாதிபதி பல தவறுகளை மேற்கொள்கின்றார். இது நாட்டுக்குச் செய்கின்ற பாரிய துரோகமாகும்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் மீது வரிகளை சுமத்துகின்றனர். கடந்த கால ஆட்சியாளர்கள் மேற்கொண்ட தவறுகளால் ஏற்பட்ட நஷ்டத்தை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சிப்பது பாரிய அநியாயமாகும். எனவே, மக்கள் மீது சுமைகளை சுமத்துவதை விடுத்து, கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்களிடமிருந்து பெற வேண்டியதைப் பெற்று மக்களை பாதுகாக்க வேண்டும்.

மேலும், உரிய நேரத்துக்கு தேர்தலை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசாங்கமும் தேர்தல் ஆணைக்குழுவும் தனித்தனியாக பிரிந்து செயல்படுவது போன்றே எண்ணத் தோன்றுகின்றது. மக்களின் வாக்குரிமையை அறிந்து, ஜனநாயகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, அரசாங்கம் தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து, எதிர்வரும் தேர்தலை உரிய நேரத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கின்றது" என்று கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »