கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் இறுதிநாள் அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றபோது கிளிநொச்சியை சேர்ந்த நபரொருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களாக கரைச்சி பிரதேச சபையின் நிர்வாகத்தில், தான் உட்பட பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களிலும் நான் தனியொரு நபராக கரைச்சி பிரதேச சபையின் அநீதிகளுக்கு எதிராக போராடியுள்ளேன். எனினும், இன்று வரை எனக்கான நீதி கிடைக்கவில்லை என்கிறார்.
இந்த தனிநபர் போராட்டத்தில், 'பிரான்ஸின் துயரம் சாய்ந்த கோபுரம்; சீனாவின் துயரம் குவாங்கோ நதி; இந்தியாவின் துயரம் கூவம் ஆறு; கிளிநொச்சியின் துயரம் கரைச்சி பிரதேச சபை' மற்றும் 'ஜேர்மனியின் கொடூர ஆட்சியாளன் ஹிட்லர்; உகண்டாவின் கொடூர ஆட்சியாளன் இடியமீன், கிளிநொச்சி பிரதேச சபையின் கொடூர ஆட்சியாளன் வேழமாலிகிதன்' என எழுதப்பட்ட பதாதை ஒன்றையும் துவிச்சக்கர வண்டியில் கட்டியவாறு கரைச்சி பிரதேச சபையின் முற்றத்தில் தனது எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.