Our Feeds


Monday, April 24, 2023

ShortTalk

ஈஸ்டர் தாக்குதல் அரசியல் செயல்பாடுகளில் கர்தினாலின் தலையீடு பல பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளது - சு.க பொதுச் செயலாளர் தயாசிரி பகிரங்க குற்றச்சாட்டு!



(எம்.மனோசித்ரா)


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய அரசியல் செயற்பாடுகளில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தலையிடுவது பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக செயற்படாமல் உண்மையை கண்டறிவதற்காகவே நாம் செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கைது செய்வதற்கான அரசியல் செயற்பாடுகளில் பேராயர் தலையிடுவது பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ என்போர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க மாட்டார்கள் என கூறிய அவர், தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் அந்த பட்டியலில் இணைத்துள்ளார்.

அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக செயற்படாமல் உண்மையை கண்டறிவதற்காகவே நாம் செயற்பட வேண்டும். அதனை விடுத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ ஜனாதிபதிகளை தெரிவு செய்ய முயற்சிப்பதோ பொருத்தமற்றது.

தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தமது ஆட்சில் தண்டனை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிக்கொண்டிருக்கின்றார். எதிர்பாராத விதமாக அவர் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு அவராலும் பிரதான சூத்திரதாரிகள் இனங்காணப்படாவிட்டால் பேராயர் அவருக்கு எதிராகவும் செயற்படுவார்.

இவற்றை தவிர்த்து பொலிஸார், இரகசிய பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »