தாய்வான் விவகாரத்தில் தங்களை விமர்சிப்பவர்கள், அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள் என்று சீனா எச்சரித்துள்ளது.
சீனாவின் எதிர்ப்பை மீறி தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்த பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததற்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இம்மாத தொடக்கத்தில் சீன இராணுவம், தாய்வானை சுற்றி மூன்று நாட்கள் பயிற்சிகளை அறிவித்தது. இதனால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடித்தது.
மேலும், இந்த விவகாரத்தில் சீனாவின் அணுகுமுறையை அமெரிக்கா, தாய்வான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக விமர்சித்தன.இதற்கு சீனா தற்போது எதிவினை ஆற்றியுள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிங் ஹாங் தெரிவிக்கையில்.
சமீபமாகவே தாய்வான் ஜலசந்தி முழுவதும் ஒருதலைப்பட்சமாகவும், ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்காவும், சீனாவை குற்றஞ்சாட்டி சில அபத்தமான கருத்துகள் எழுந்தன.
இத்தகைய கருத்துகள் சர்வதேச உறவுகள் மற்றும் வரலாற்று நீதி பற்றிய அடிப்படை பொது அறிவுக்கு எதிரானது.
இதற்கான விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும். தாய்வான் விவகாரத்தில் சீனாவை விமர்சிப்பவர்கள் அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள்.
சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை குழிதோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் ஒருபோதும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். தாய்வான் விவகாரத்தில் விளையாடுபவர்கள் தங்களையே எரித்துக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.