தென் அமெரிக்கா நாடான பெரு லொஎஸ்பெ ரன்சா மாகாணம் அரேக்யூபா நகரில் இயங்கிவரும் தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த தீ பரவல் குறித்து அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த தீயில் சிக்கி மூச்சு திணறியும், உடல் கருகியும் 27 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
உடல் கருகிய நிலையில் 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவம் பற்றி அறிந்ததும் பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் சோகத்துடன் அங்கு திரண்டனர்.
குறைந்த மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. பெரு நாட்டு வரலாற்றில் மிக மோசமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நடந்த தங்கசுரங்கம் கடந்த 23 ஆண்டுகளாக இயங்கி வந்தது. அந்த பகுதியில் உள்ள பல சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.