எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி 37,000 மெட்ரிக்
தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்: "மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. உலக சந்தையில் நிலவும் விலை அதிகரிப்பு இதிலும் உள்வாங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மார்ச் 25ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று வரவுள்ளது" எனத் தெரிவித்தார். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதும் பாரிய நட்டத்துடனேயே செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு மத்தியிலும், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 20 பில்லியன் ரூபாயைச் செலவிடுவதாகவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.
