பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தன்னை ஒரு குழுவினர் வேனில் கடத்திச் செல்ல முற்பட்டதாக நாரஹேன்பிட்டி பொலிஸில் பொய் முறைப்பாடு செய்த 11 வயது பாடசாலை மாணவன் ஒருவன் எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
சிறுவர் கடத்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் காணொளிகளைப் பார்த்து தான் இவ்வாறான பொய்யான கதையை உருவாக்கியதாக பொலிஸாரின் விசாரணையின்போது மாணவன் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பிரதேசத்திலுள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் இம்மாணவன், செவ்வாய்க்கிழமை (23) பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, பார்க் வீதியில் வைத்து வேனில் வந்த சிலர் தன்னைக் கடத்திச் செல்ல முற்பட்டதையடுத்து, அந்தக் கும்பலிடம் இருந்து தப்பி வீட்டுக்கு ஓடியதாக சம்பவம் குறித்து மாணவன் அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளான்.
இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்தவுடன் நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், மாணவனைக் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு அழைச் சென்று அங்கு காணப்பட்ட சிசிரிவி கமெராக்களை சோதனையிட்ட போதிலும் அவ்வாறான சம்பவம் எதுவும் அந்தப் பகுதியில் கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.