இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் மாலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து குஜராத்தின் ஆமதாபாத் புறப்பட்டது.
இந்த விமானம் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகள் வழியாக பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியது.
இவ்வாறு மோசமான வானிலை நிலவியதால் இண்டிகோ விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகி வழிதவறி பாகிஸ்தான் வான்பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் லாகூருக்கு அருகே உள்ள குஜ்ரன்வாலா பகுதிக்கு சென்றது.
இரவு 7.30 மணி அளவில் லாகூருக்கு வடக்கே பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்த விமானம் பின்னர் 8.01 மணி அளவில் மீண்டும் இந்திய வான்பகுதிக்குள் நுழைந்தது.
சுமார் ½ மணி நேரம் பாகிஸ்தான் வான்பகுதிக்குள் பயணித்தாலும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி இந்திய பகுதிக்குள் அது திரும்பியது. இந்த விவகாரம் விமான நிலைய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.