கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தோடம்பழம் வலயமொன்றை நிறுவ விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது இந்நாட்டில் பல மாவட்டங்களில் தோடம்பழம் பயிரிடப்பட்டாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தோடம்பழத்துக்கு பொதுமக்களின் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு.
2022 ஆம் ஆண்டு தோடம்பழம் இறக்குமதிக்காக அரசாங்கம் 496 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதுடன், 2407 மெற்றிக் தொன் தோடம்பழம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆனால் 2022ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் இந்த நாட்டுக்கு அதிகளவு தோடம்பழம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் வெளிநாட்டு தோடம்பழ வகைகளை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, மத்திய மலையகத்தின் மேல் பகுதிகள், பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் தாழ்வான பிரதேசங்கள் தோடம்பழம் பயிரிட ஏற்ற காலநிலை கொண்ட பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள ஆராய்ச்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.