Our Feeds


Saturday, June 17, 2023

ShortNews

VIDEO: பெண் காதி நீதிபதி நியமனத்தை உலமா சபை ஒப்புக்கொள்ள வில்லை, ரவுப் ஹக்கீம் கூறியது பொய் - உலமா சபை அறிவிப்பு



முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரர் ரவூப் ஹக்கீம் பெண்களை காதி நீதிபதிகளாக நியமிப்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாட்டுக்கு மாற்றமான, உண்மைக்குப் புறம்பான கருத்தொன்றை கூறிய விடயம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கிறது. 


ஜம்இய்யாவானது ஷாபிஈ மத்ஹப் உட்பட நான்கு இமாம்களுடைய கருத்துகளை தெளிவாக விளங்கி வைத்திருப்பதோடு ஷரீஆவின் நிலைப்பாடுகளில் எப்போதும் உறுதியாகவே இருந்துவருகிறது. இவ்விடயம் (MMDA) தொடர்பில் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டை அதன் உத்தியோகபூர்வ இணையதள பக்கத்தில் பார்வையிடலாம்.


இதுதொடர்பாக சகோதரர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதோடு முஸ்லிம் விவாக, விவாகரத்து விடயம் தொடர்பாக பல தடவைகள் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டை அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளதோடு 2022.12.23ம் திகதி ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு அவர் வருகை தந்தபோது ஜம்இய்யா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியும் அவர் தொடர்ந்து ஜம்இய்யாவுடன் முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


அதேபோன்று ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் குழுவொன்று அவரது இல்லத்தில் அவரை சந்தித்து “PROPOSAL FOR THE MUSLIM MARRIAGE & DIVORCE ACT SHARI’AH PERSPECTIVE” எனும் தலைப்பில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பான மார்க்க ரீதியான வழிகாட்டல்களையும் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டையும் எழுத்து மூலம் சமர்ப்பித்து தெளிவாக அவருக்கு விளங்கப்படுத்தியிருக்கிறது. 


மேலும் 2023.06.07ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்றிலும் பெண் காதி நியமனம் சம்பந்தமான ஜம்இய்யாவின் நிலைப்பாட்டை அவருக்கும் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜம்இய்யா தெளிவுபடுத்தியிருக்கிறது.


இந்நிலையில் ஜம்இய்யா கூறியதாக உண்மைக்குப் புறம்பான கருத்தொன்றை நேரலை நிகழ்ச்சியொன்றில் கூறியிருப்பதையிட்டு ஜம்இய்யா தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு உடனடியாக அவர் தனது கருத்தை வாபஸ்பெற்று உண்மை நிலைப்பாட்டினை ஊடகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஜம்இய்யா வேண்டிக்கொள்கிறது.


ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »