இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா தீவில், ஆபத்தான சூழ்நிலையில் தாம் பொய்யாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, மூன்று பிரித்தானிய அமைச்சர்கள் மீது இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் குழுவினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவுக்கு செல்ல முயன்றபோது, படகு பழுதாகிய காரணத்தால், இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள், டியாகோ கார்சியா தீவில் அடைக்கலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, அவர்கள் அங்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் அங்கு பாலியல் மற்றும் உடல் ரீதியான தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலர் தங்களைத் தாங்களே காயப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது தங்களது உயிரை மாய்த்துக் கொல்ல முயன்றுள்ளனர்.
