சமூக செயற்பாட்டாளர் இஷாம் மரைக்கார் மீது நடத்தப்பட்ட மிலே ச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் உடனடியாக கைது செய்யவேண்டும் என வலியுறுத்தியும் புத்தளம் நகரத்தில் நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் தாக்குதலுக்குள்ளான இஷாம் மரைகாரின் சகோதரரான இல்ஹாம் மரைக்கார் தலைமையில் புத்தளம் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் புத்தளம் 1400 மினாராவுக்கு முன்பாக ஒன்று திரண்ட இளைஞர்கள் பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை முழங்கியவாறும், தாக்குதலை நடத்தியவர்களை போலீசார் கைது செய்யுமாறு வலியுறுத்தியதை காண முடிந்தது.
இதன் போது தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு வைத்தியசாலைகள் சிகிச்சை பெற்று வருகின்ற இஷாம் மரைக்காரின் உடல்நிலை தொடர்பில் அவரது சகோதரர் இல்ஹாம் மரைக்கார் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் நடத்தப்பட்டு ஒன்பது தினங்களாகியும் இதுவரைக்கும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை இதன் போது அவர் ஊடகங்களிடம் முன்வைத்தார்.
புத்தளம் தள வைத்தியசாலையில் இஷாம் அனுமதிக்கப்பட்ட போது அவருக்குரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் அதனை அடுத்து அவர் கொழும்புக்கு மாற்றப்பட்டார் என்றும் தெரிவித்தார்
புத்தளம் போலீஸ் நிலையத்தில் மூன்று முறைபாடுகளும் கொழும்பில் ஒரு முறைபாடும் செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களை போலீசார் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.










