Our Feeds


Sunday, July 9, 2023

ShortNews

காஞ்சன, ஷெஹான், பிரமித உள்ளிட்ட பல SLPP, MP க்கள் ரனிலுடன் பயணிக்க தீர்மானம்.



(எம்.மனோசித்ரா)


அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க மற்றும் பிரமித பண்டார தென்னகோன் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் இளம் உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தமது எதிர்கால அரசியல் பயணத்தை தொடர தீர்மானித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு நாட்டின் ஸ்திரத்தன்மை முற்று முழுதாக பாதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை பொறுப்பேற்று ஒரு வருட காலத்துக்குள் சகல பிரச்சினைகளுக்கும் ஓரளவு தீர்வினை வழங்கியுள்ளார். 

இவ்வாறு செயற்திறன் மிக்க தலைவருடன் தமது அரசியல் பயணம் தொடர வேண்டும் என விரும்புவதாக குறித்த இளம் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மாத்திரமின்றி, பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான கருத்துக்களையே தெரிவித்துள்ளனர். 

ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க, உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால், அவரை ஆதரிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

தற்போது அமைச்சுப்பதவிகள் எவையும் அற்ற பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே ஜனாதிபதியுடனான பயணத்தில் அதிருப்தியுடன் காணப்படுவதாகவும், ஏனையோர் தமது சிறந்த அரசியல் எதிர்காலத்துக்கு ரணிலுடன் பயணிப்பதே பொருத்தமானது என்ற நிலைப்பாட்டிலேயே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனிடம் வினவியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்:

கடந்த ஆண்டு இந்த காலப்பகுதியில் பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட அனைத்தும் ஸ்திரமற்ற நிலைமையிலேயே காணப்பட்டது. இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்பதற்கு எவரும் முன்வராத நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சவாலை ஏற்றார். அத்தோடு முக்கிய பொறுப்புக்களை எம்மைப் போன்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்தார்.

நாம் புதிய பரம்பரையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளாவோம். உலக நிலைவரம் தொடர்பிலும், நாட்டின் அரசியல் எதிர்காலம் தொடர்பிலும் வேறு கோணத்திலேயே நோக்குகின்றோம். பாரம்பரிய அரசியலிலிருந்து வெளிவர வேண்டும் என்று நாம் நம்புகின்றோம். ஜனாதிபதியும், நாமும் இரு வேறு அரசியல் கொள்கையுடைய தரப்புகளாவோம்.

எவ்வாறிருப்பினும் இந்த இரு தரப்புக்களும் இணைந்ததன் காரணமாகவே இன்று நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது. இதற்கு தலைமை வகித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலை வார நாம் விரும்பவில்லை. எனவே, எதிர்காலத்திலும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டிலேயே நாம் காணப்படுகின்றோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »