அனுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெப்பித்திகொல்லாவ குறுலுகம கிராமத்தில் பாம்பு கடிக்கு உள்ளாகி உயிரிழந்த ஒருவரின் வீட்டுக்கு ஏழாம் தினமான ஞாயிற்றுக்கிழமை (28) வாகல்கட பிரதேசத்தில் இருந்து பௌத்த பிக்கு ஒருவர் வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் அதேகிராமத்தில் வசித்து வரும் விகாரையின் விகாராதிபதி மற்றும் கிராம மக்கள் சிலர் குறித்த பௌத்த பிக்குவின் வருகைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு பிரித் ஓதும் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடைத்து சம்பவ இடத்துக்கு சென்று பௌத்த பிக்குவை அனுப்பி வைக்க முற்பட்ட போது பொலிஸாரை தாக்கியுள்ளதுடன் கடமைக்கும் இடையூறு விளைவுத்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறுலுகம ரஜமஹா விகாரையின் விகாரதிபதியான ரஞ்சுனலாகே சுகதவன்சவை (30வயது) கைது செய்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவத்தில் இரண்டு பொலிஸார் உட்பட பௌத்த பிக்கு ஒருவரும் காயம் அடைந்த நிலையில் கெப்பித்திகொல்லாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
அப்துல்சலாம் யாசீம்
