மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் குற்றச் செயல்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இராஜகிரிய ஒபேசேகரபுரவில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
வெல்லம்பிட்டி சேதவத்தை பகுதியில் வைத்து போலியான இலக்கத் தகட்டை பொருத்தி அதன் மூலம் கொலையாளிகள் தப்பிச் செல்ல பயன்படுத்திய வெள்ளை நிற காரும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் மற்றும் ஒபேசேகரபுர, ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 62 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது